இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

மே 14, 2007

எந்தப்படத்துலே எந்தப்புண்ணியவான் எழுதிய வசனம்யா இது.இப்ப நாடு இருக்குற நெலமையிலே நம்ம ஆட்சிலே இருக்குறவங்க சொல்லாம சொல்லுற வசனமய்யா இது.

ஆட்சி முறை மாறுகிற வரை ஆட்சியாளர்கள் மாற மாட்டார்கள். எடுத்ததுக்கெல்லாம் அமெரிக்காவை உதாரணம் காட்டும் புண்ணியகோடிகளையும் ரஷ்யாவையும் , கூபாவை இழுக்கும் தனவான்களையும் குற்றம் கூறி பயனில்லை.

மாற்றான் தோட்டத்து மல்லிகையில் மணம் உண்டு என்று கூறியது எந்தவொரு கணத்தில், அந்த அர்த்தத்தை அனர்த்தமாக்கி மாற்றான் தோட்டத்து மல்லிகையை
கவர்ந்து கொண்டு வந்து,அடிமை சாசனம் எழுதி கோடிகளில் குளிக்கும் கோமான்களின் சித்து விளையாட்டுகளின் பலியாடுகளில் அவர்களின் குடும்பங்களும் விதிவிலக்கல்ல.
(கஞ்சா கற்றுக்குட்டிகள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பேற்க மாட்டேன்).

ஆட்சியை ஏனய்யா ஒரே ஆளும் ஒரே குடும்பமும் நடத்த வேண்டும், இதென்ன மன்னர் ஆட்சி முறையா. அதைத்தான் அம்பேத்கரும் வல்லபாய் படேலும் ஒழித்து விட்டு மக்களாட்சியை புகுத்தி பன்னெடுங்காலமாகி விட்டதே.

முதல்குடிமகனின் பேச்சு வெறும் சுரைக்காய்க்குதானோ. நாட்டில் இரு கட்சி கொள்கைக்கு ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை. ஏனைனில் வருமானம் கிடையாதே.

கவரிமானின் பரம்பரைகள் வாரிக்கொண்டு போக வாரியம் கிடைக்கவில்லை என்றால் ஒரு கட்சியும், கூடவே கூத்தடிக்க கோவேறு கழுதைகளும் வெளியேறும். சீட்டுக்கட்டு கோபுர வஸ்து ராஜாக்களுக்கும், அரிதார மங்கைகளுக்கும் கிடைத்த,
கிடைக்கும் மரியாதையும் அந்தஸ்த்தும் படித்த திறமைக்கும், பாட்டாளிகளுக்கும் கிடைப்பதில்லையே இத்திருநாட்டில்.

நாமெல்லாம் செத்தபின்னும், சனிக்கிழமை சனிபகவானுக்கும் பயன்படுத்தும் ஒரு பொருள் எள், இப்பொருளை பெட்டி பெட்டியாய் வாங்கி வந்த இரஷ்யா, இந்தியாவின் தரம் சரி இல்லை என்று கொள்முதலை நிறுத்தி விட்டது. இதனைப்பற்றி எந்த ஒரு ஊடகத்திலாவது முதலைக்கண்ணீராவது வடித்தனரா , இல்லை ஒரு கருத்துக்கணிப்புதான் நடத்தினரா.

வரும் 2008ல் பக்கத்து நாடான சைனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் கலந்து கொள்ள எத்துனை P.T.உஷாக்கள் தயார்படுத்தியுள்ளனர். அனைத்து ஊடகங்களும் இதன் பக்கமே தலை வைத்துப்படுப்பதில்லை. கருத்துக்கணிப்புதான் நடக்குமா.

இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்த காரணத்தால், கடன்களின் மீது வட்டி விகிதம் உயர்ந்த காரணத்தால் வெளிநாட்டு ஏற்றுமதிகளில் லாபமிழந்த வியாபாரிகள் எத்தனை பேர் என்ற கருத்துக்கணிப்பு நடந்ததா.

ஏறி வந்த ஏணிப்படியை எட்டி உதைத்து எக்காளமிட்ட
எத்தர்களின் கதையை எத்தனை பிரச்சாரங்களில் கேட்டு
விட்டோம். நான் ஏணியென்று குறிப்பிடுவது ஏமாளி மக்களையும் எத்தர்களென்று கூறுவது யாரென்றும் உங்களுக்கே தெரியும்.

அரசியலில் நாடகங்கள் இயல்பென்றாலும் சிலப்போது
அவை கூத்துகள் ஆகி பார்வையாளர்களை முட்டாளாக்கி
விடுவதுமுண்டு.

கணக்கு கேட்டவனை கூத்தாடி என்றும், வேற்று தேசத்தானென்றும் வசை பாடியதை இந்நாடறியும்.

பங்கு கேட்ட உடன்பிறவாத்தம்பியை கொலைக்கழுவிலேற்றி, பின் மன்னிப்பது போல் ஆரத்தழுவி மற்றுமொரு முறை முதுகில் தட்டுவது போல் துரோகி பட்டமளித்து நம்மையில்லாம் இ.வா. செய்யத்தும் இக்கூத்துகளில் ஒன்றுதான்..

மீண்டுமொரு முறை நாடகம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால் இம்முறை குடும்பமே நடிக்கிறது.
முடிவு யார் கையில். கைக்கோளிட்டு காட்ட ஒரு புதுத்தலைப்பு கிடைத்துவிட்டது.

என்மகன், முதல்வன், உறவைக்காத்த கிளி,பாசப்பறவைகள், இதெல்லாம் பழைய மொந்தை.

புதுக்கள் புது மொந்தை தயாராகிறது.
எனக்கும் ஆட்டோ வ்ருகிறது.

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது டமிளாக இருக்கட்டும்.


மாறன் செய்தது சரியே

மே 12, 2007

மாறன் மந்திரி மட்டுமில்லீங்க. அவுரு ராஜ பரம்பரைங்க.
அப்படி என்னதான் செஞ்சுட்டாரு அவுரு. கொலையா செஞ்சுட்டாரு.
போராட்டத்துலே அவுங்க தாத்தா செய்யாததா.

தாத்தா எவ்வளவு பெரிய தாதா தெரியுமா.அவுரோட ஆட்சிலே என்னென்ன
நடந்தது தெரியுமா.வரலாறு தெரியுமா உங்களுக்கு.

மாறனோட அப்பா ரொம்ப உக்கிரமானவரு.மாறனோட தாத்தா பேரு என்னன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா.

மாறனோட தாத்தா பேரு தலையானங்காலத்து செருவென்ற நெடுஞ்செழியன்.சந்தேகமா இருந்தா இங்க போயி பாத்துக்கங்க.

தமிழ்நாட்டு அரசியல் சும்மா தூள் பறக்குதுங்க.
மக்கள் மூடை மாத்தாலாமின்னு சும்மா ஒரு மொக்க போட்டுப்பாத்தேன். ஹி ஹி.தலைப்பு சும்மா உங்களை உள்ள கூப்புடறதுக்கு.


அன்பு உடன் பிறப்பே

மே 10, 2007

முரசொலியின் முதல் பக்கத்தில் இப்படித்தன் இருக்கும் இன்று.

அன்பு உடன் பிறப்பே

குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். .கழகத்தில் பல கலைகளையும் கற்றதுஎமது குடும்பம்.இக்குடும்பத்தில் நீயே உயிர்த்தூண்.
வேண்டாமடா கண்மணிகளே! கண்ணாடி வீட்டிற்குளிருந்து கல்லெறிய வேண்டாம். ஒரே குடும்பமாகிய எமது கழகத்தில் கலகமுண்டாக்க வேண்டுமென்று எதிர்க்கட்சி கூடாரத்தில் உருவாக்கிய சதித்திட்டத்தை முறியடிக்க எனதன்பு மாறன் இல்லாமல் போய் விட்டான். உண்ணாநோன்பிருந்து உயிர் துறக்கவாமுடியும், பின் இக்கோட்டான்களின்
கொட்டம் இன்னமும் அதிகமாகி விடுமே. விடும் விடுமென தோள் தட்டி போர் முரசு கொட்டவேண்டிய நேரமல்ல இது.புலி பதுங்குவது பாய்வதற்கேயன்றி ஓணான்களுடன் பாய் விரித்து படுப்பதற்கல்ல.
போய்யா போவென்று பதவி கூறுகிறது.வாய்யா வாவென்று காடு அழைக்கிறது. இதற்கிடையில் நம் பாசப்பறவைகளின் உரசல் கழகத்தை கிடையில் தள்ளிப் பார்க்கிறது. கத்தியை தீட்டாதே ! புத்தியை தீட்டென்றனறு எனதருமை அண்ணா கூறினானே! நினைவிருக்கிறதா உனக்கு..
பொன்விழாக்கொண்டாத்திலே பசுத்தோல் போர்த்திய நரிகள் உலா வருகின்றன. அவற்றை கண்டெடுத்து பல் பிடுங்கும் கடமையும் வீரமும் உனக்கில்லையா. கைதட்டி ஆடிப்பாட வேண்டிய இந்நேரத்திலே நயவஞ்சகர்கள் கைகொட்டி சிரிக்க,ஆர்ப்பரிக்க காரணமென்ன கண்மணி.
திரும்பிப்பார்! நாம் கடந்து வந்த போர்க்களங்கள் எத்துணை, வாங்கிய விழுப்புண்கள்தான் எத்துணை. வளத்தகடா மார்பில் பாய்ந்த கதையை நீயும் படித்திருப்பாய், அதன் விளைவுகள்தான் என்னவென்று ஒருகணம் சிந்திந்துப்பார். எள்ளி நகையாடுவோர்,நிந்திப்போர் சுற்றியிருக்க,
சொந்த வீட்டில் கன்னம் வைக்க மனது கொள்ள வேண்டாமடா செல்வனே.
என்னை கொல்லாமல் கொல்கிறது இப்பித்தலாட்டக்காரர்களின் அம்புகள்.
மகாபாரதப்போரில் பிதாமகர் அம்புப்படுக்கையில் வீற்றிருந்து வரம் கேட்டார். நான் உங்கள் அன்புப்படுக்கையிருந்து கேட்கிறேன் வரம்.
அமைதி காத்தருளுங்கள்! வெற்றி நமதே.

அண்ணா நாமம் வாழ்க.


சோ ஒரு வியர்டு

ஏப்ரல் 16, 2007

இது போல் நடக்குமென்று கனவிலும் யாரும் நினைத்தும் பார்த்திராத ஒரு நிகழ்ச்சி. திரைப்படங்களிலும் கற்பனைக்கதைகளிலும் மட்டுமே பார்த்து, படித்து வியப்புற்றது.

நேற்று வர்ஜினியாவில் நடந்த துப்பாக்கி சூடு அல்லது படுகொலைகள் பற்றித்தான் குறிப்பிடுகிறேன். நேற்று செய்தியாக படித்த போதும் இரவு Larry King Live யிலும் பார்த்த போதும் சற்றேர விளங்கியது.

இந்த நிகழ்ச்சிக்கும் இரண்டொரு நாட்களுக்கு முன் வந்த ஒரு செய்திக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று எனது வியர்டு மனம் அசை போட்டது.

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் அதிக எண்ணிக்கையில் படிப்பவர்கள் தென் கொரிய மாணவர்கள்.மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 18%.அடுத்து வருபவர்கள் இந்தியர்கள். 15%.
இந்தியர்களுக்கு அடுத்துதான் சீனர்கள்.

அதிக எண்ணிக்கையில் படிக்கும் தென்-கொரியர்களை குறைப்பது எவ்வாறு.
அதற்கான திட்டத்தின் முதல்படிதான் இந்த நிகழச்சியின் கொலையாளியை
தென் கொரிய மாணவராக அடையாளம் காட்டுதல்.

தேவைப்படும்போது கூட்டு/கூட்டி வைத்து கொஞ்சிக் குலாவுவதும்
தேவை இல்லாதபோது குல்லாப்போடுவதும் ஆங்கிலேயைகளுக்கு கைவந்த
கலை ஆயிற்றே.

பார்த்துக்கொண்டே இருங்கள்,புதரகத்தில் இருக்கும் நமது பங்காளிகளுக்கும்
இந்த நிலை வரக்கூடும். ஏனெனில் புலம்பெயருபவர்களில் முதல் இடத்தில்
இருப்பவர்கள் நமது இந்தியர்களே.

இப்படுகொலையை செய்ததாக கருதப்படும் சோ சேவுங் உய் இன்
அறையில் கண்டெடுக்கப்பட்டவை .

“சோ” வின் நண்பர்களும் ஆசிரியர்களும் கூறியவற்றை தொகுத்தால்
சோ ஒரு வியர்டுதான். (தலைப்பு உள்ள வந்தாச்சு)

உண்மையிலேயே இந்த நிகழ்ச்சிக்கு காரணம் என்ன? ,
இது போன்று ஒரு நிகழ்ச்சி உலகத்தின் எந்த ஒரு பகுதியில் நடந்தாலும்
அதை மீடியாக்கள் இவ்வளவு பரபரப்புடன் காண்பிக்குமா.

மாண்டவர்களின் குடும்பங்களுக்கும் உற்றார் உறவினருக்கும் பதிவுலகின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்.


தினமலரின் தில்லு

ஏப்ரல் 16, 2007

வடக்கும் தெற்கும் என்றாவது சந்திக்க முடியுமா.?
கிழக்கில் உதிக்கும் சூரியன் என்றாவது மேற்கில் உதிக்க முடியுமா.?

கீழே கொடுத்திருக்கும் இந்த படத்தை பாருங்கள்.
யாருக்கய்யா இந்த தில்லு வரும். ரத்தத்தின் ரத்தம் இல்ல ஒரு உடன்பிறப்பு யாராவது ஒரு டிஜிட்டல் பேனர் செஞ்சு போட்டா , ஆட்டோ இல்ல வரும் வீட்டுக்கு.

கலைஞர் ஒரு ஓரமா பாத்து சிரிச்சுகிட்டு இருக்காரு.

அம்மா சைடுலே பாத்து மொறச்சுகிட்டு இருக்காங்க.

தமிழக அரசியலில் இரு துருவங்களாம் “கலைஞர்” கருணாநிதியையும்
“அம்மா” ஜெயலலிதாவையும் அருகருகே வைத்துப்பார்த்த
இந்தச் சேவையை தமிழ்கூறும் நல் உலகம் மறவாது.

நன்றி


ஆணி புடுங்கிங் டெக்னாலஜி

ஏப்ரல் 12, 2007
புதுசா குடி போன வீட்டுலே, வீட்டுக்காரன் சொன்னான்.
சுவத்துலே புதுசா ஆணி எதுவும் அடிக்கக்கூடாது.இருக்குற ஆணி எதுவும் புடுங்கக்கூடாது.

அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு,தமிழ்மணத்துலே மக்கள்ஸ்
அடிக்கடி இந்த வார்த்தைய உபயோகிச்சு கேட்டுருக்கேன்.
“ஆணி புடுங்கறேன்,ஆணி அடிக்கிறேன்”. இதெயே திருப்பி திருப்பி சொல்லுவாங்க.
அதுக்கெல்லாம்தான் மிஷினு இருக்குதே, இன்னமும்
ஏன் நாளெல்லாம் அதையே செய்யுறாங்கன்னு குழம்பிப்போயி கூகிளாண்டவர்கிட்டே கேட்டா “இதத்தான்” காட்டுனாரு. அவுரு சொன்னாரு “ஆணி அடிக்கத்தான் மிஷின் இருக்குது. புடுங்கறதுல உங்க ஆளுங்கதான் திறமசாலிங்க”. அதனாலதான் உலகம் முழுக்க நம்ம ஆளுங்க தெறம தேவைப்படுதுன்னு நெனைக்கிறேன்.

இப்ப பொழுது போகாம ஆணி புடுங்கும்போது இந்த

டெக்னாலஜிய பத்தி யோசிச்சு சொல்லுங்க.


டிப்பு டிப்பு டிப்பு குமாரு

மார்ச் 26, 2007

எல்லாரும் காப்பி குடிச்சிருப்பீங்க, இல்ல டீ குடிச்சிருப்பீங்க. காப்பியிலே எத்தனெயோ வகையிருந்தாலும் மசாலா காப்பின்னு ஒண்ணு இருக்கா?

ஆனா டீ யிலே இருக்கே. அந்த மசாலா டீ குடிச்சிருக்கீங்களா. நம்மளுக்கும் மசாலா டீ விருப்பமான ஒண்ணுதான்.

போன் வருஷம் இந்தியா போயிச்சேந்த மூணாவது நாளு
தங்கமணியும் நானும் கடைமேயக் கிளம்பினோம்.

சென்னை அண்ணா நகர்லே புதுசா “வேவ்ஸ்” அப்படின்னு ஒரு ரெடிமேட் கடை திறந்திருக்காங்க. “அருமையான கலைக்ஷன்”னு எங்க மதனி சொல்ல ஆட்டோவை அங்க விடச்சொன்னோம்.

மூணு மாடியும் ஏறி வாங்கு வாங்குன்னு வாங்குச்சு தங்கமணி. அட்டைய கிழிச்சிட்டு ஒரு சில துணிகளை அளவு சரி செய்ய குடுத்துட்டு இருந்தோம்.
அங்கியே “காப்பி இல்ல டீ குடிக்கறீங்களா”ன்னு கேட்டாங்க. நாங்க “வேண்டாம்”ன்னு சொல்லிட்டு, ஒரு “அரைமணியிலே வந்திர்ரோம்”ன்னு வெளியே கிளம்பினோம்.

எதுத்த மாதிரி கொஞ்ச தூரத்துல வசந்தபவனோ ஆரிய பவனோ சரியா ஞாபகம் வர்லீங்க.ஆனா அங்க போயி காப்பி குடிக்கலாமுன்னு நடந்தோம்.

பக்கத்துலேயே கண்ணுலெ பட்டது “coffe day” , அந்தக்காலத்துல தங்கமணிக்கு “coffee day” முட்டாயி நெறைய வாங்கி குடுத்திருக்கேன். அந்த ஞாபகத்திலே இங்க போலான்னு நான் சொல்ல, தங்கமணி தலைய ஆட்டுச்சு.

உள்ற போயி ரெண்டு சீட்டு புடிச்சு உக்காந்தா சுத்தி ஒரே பீட்டருங்களும் ஹேரிகளும் ஜே.லோக்களும் கடலை போட்டிட்டிருந்தாங்க.

நம்மளும் அலோன்ஸோவும் பினாலோப் குருஸாவும் மாறி எஸ்பான்யோல்ல பினாத்திகிட்டிருந்தோம்.(ஹி ஹி).

ஆர்டர் எடுக்க வந்தாரு ஒரு பீட்டரு, நான் வழக்கம்போல் ” கப்பூசினோ வேணுமா”ன்னு தங்கமணிகிட்ட கேக்க, தங்கமணி “மசாலா டீ குடிக்கலாங்க. இந்தியாவுலதான் இதெல்லாம் கிடைக்கும்”ன்னு சொல்ல, நானும் சப்பு கொட்டிட்டு ,”சரி”ன்னு “ரெண்டு மசாலா டீ, ரெண்டு சிக்கன் பப்ஸ்” ஆர்டர் குடுத்தேன்.

கொஞ்ச நேரத்துலே வந்துங்க, ரெண்டு கப்பு, ஒரு குடுவையிலே சுடுதண்ணி, கொஞ்சூண்டு பால், ரெண்டு dip dip ,அவ்வளவுதாங்க. “சக்கரை வேணுமா இல்ல sweetner வேணுமா”ன்னு வேற கேட்டாரு பீட்டரு.

“சக்கரை வேணு”முன்னு சொல்லிட்டு,” மசாலா டீ கேட்டேன்,டிப்பு டிப்பு தர்ரீங்களே”ன்னு கேட்டேன்.ஒரு மாதிரியா பாத்துட்டு “இதான்யா அது”ங்கறான்.

“சுடுதண்ணிலே டிப்பு டிப்பூ போட்டா மசாலா டீ ஆயிருமா, பால கொதிக்க வெச்சு, அதுலே டீ, இஞ்சி, ஏலக்கா, கொஞ்சமா வெள்ள மிளகுத்தூள் இதெல்லாம் போட வேண்டமா” ன்னு யோசிச்சுகிட்டே குடுத்த கருமத்தை குடிச்சா தங்கமணி GEM ஆயிருச்சுங்க.
(G.E.M – Ginger Eaten Monkey).

சரி, பப்ஸ் எங்கய்யான்னு கேட்டேன், இதோ தயாராகிட்டு இருக்கு சார்ன்னு சொன்னாரு பீட்டரு. ஸ்பெசலா தயாராகுதோன்னு மெல்லமா எட்டிப்பாத்தா
அப்பத்தான் ஷோகேஸ்ல இருந்து எடுத்து “மைக்ரோவேவ்” ல சூடு செய்யுராரு பீட்டரு.

“போய்யா! நீயும் உன்னோட பப்ஸூம்” ன்னுட்டு, பில்லக்கட்டிட்டு நடையக்கட்டுனோம் நானும் தங்கமணியும்.

அதுக்கப்புறம் மறந்துகூட் அந்தப்பக்கம் போகவேயில்ல.
பேசாமா முக்குல இருக்குற சேட்டன் கடையிலே டீயும் கிழங்கு போண்டா சாப்டா கூட ந்ல்லாயிக்கும்னு பேசிக்கிட்டோம்


கான்ஸ்டான்டிநோபிளாம்

மார்ச் 25, 2007

இதோ அதோன்னு ஒரு வாரம் ஆகிப்போச்சுது
நிசமாவே நம்ம தமிழ்மணம் வாசகர்கள் அஹிம்சாவாதிகள்தான்.

ஏதொ ஒன்று எழுத ஆரம்பித்து ஏதோவென்றில் முடிந்தது.
இன்று காலையில் பார்த்தால் அபிஅப்பா வேறு கொசுவத்தி சுத்தி இருந்தார்.

சரி நம்மளும் மூக்கை தீட்டிட்டு மூக்கை நீட்டிறலாமுன்னு பாத்து, இதோ.

L.K.G / U.K.G- டென்னிசன் பிரைமரி ஸ்கூல்
வாத்தியாரு பேரு அதேதான், எனக்கு ரெண்டு வயசுலிருந்து நாலு வயசு வரைக்கும் இவர்கிட்டதான்.வீட்டுக்கு பக்கத்துலே இருந்ததால்
ரொம்ப வசதியா இருந்ததாம்.

ஒன்றாம் வகுப்பு : மேரி டீச்சர் , உயரமா அழகா இருப்பாங்க.

ரெண்டாம் வகுப்பு : ரோஸி டீச்சர், கிரிஸ்டினான்னு இவுங்க அக்கா பொண்ணும் எங்கூட படிச்சதுலெ நல்ல ஞாபகம் இருக்குது.

மூணாம் வகுப்பு: இராணி டீச்சர் : குட்டையா இருப்பாங்க. சாந்தின்னு அவுங்க பொண்ணு எஙகூட படித்தது. தனியா பாத்து மருமகனேன்னு கூப்புடுவாங்க.அப்பெல்லாம் அதுக்கு அர்த்தம் தெரியாது. கல்லூரி செல்லும்போது அவர்களையும் அவர் மகளையும் ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்த்த பொழுது “மருமகனை” ஞாகபப்படுத்திய பொழுது
அதிகம் வெட்கப்பட்டட்து அவருடைய மகளை விட அவர்தான்.

நாலாம் வகுப்பு : ஜோஸ்பின் டீச்சர் , அவருடைய மகள் அனிட்டா , என்னை விட ஒரு வயது இளையவர்.

ஐந்தாம் வகுப்பு : ஆகத்தா டீச்சர், என்னுடைய விருப்பத்தோழி,லில்லியின் தாயார்.(நான் பத்தாவது படிக்கும்போது கேன்சர் வந்து இறந்தார்).

ஆக மொத்தம் எல்லா டீச்சருக்கும் மகள்கள்தான் இருந்தாங்க.பெருசு இதெல்லாம் ஓவரு.அடங்குன்றீங்க. சரி சரி.

ஆறாம் வகுப்பு :பள்ளி மாறியதில் வேலுச்சாமி வாத்தியார்.என் தந்தையாரின் நண்பர் ஆகையால்,மிக நன்றாக் பழகுவார்.வீட்டிற்கும் வந்து செல்வார்.

ஏழாம் வகுப்பு : ரங்கசாமி வாத்தியார் (ஸொண்டி என்று பட்டப்பெயர்)
நாங்கள்லாம் பெருசாயிடெமில்ல, பட்டப்பேரு வெக்க ஆரம்பிச்சுட்டோம்.

எட்டாம் வகுப்பு : சரசுவதி டீச்சர், ஆறாம் வகுப்பு வேலுச்சாமி வாத்தியாரின்
இல்லத்தரசி. (கூளச்சி என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு).

ஒன்பதாம் வகுப்பு : கந்தசாமி வாத்தியார். செம அடி. பட்டையக் கிளப்பிருவாரு.இவருக்கு ஒரு பழக்கம் உண்டு. எல்லா வார்த்தைகளுடன்
ம் சேர்த்து பேசுவாம்.

“என்னம்,சொல்லும்,பாரும்.”இப்படி பேசுவார் என்று தெரிந்திருந்தும் ஒரு முறை வரலாறு பாடம் நடத்தும்போது “constantinoble”என்பதை “கான்ஸ்டான்டிநோபிளாம்” என்று சொன்னார்.

கேள்வி பதில் நேரத்தில் என் முறை வந்தபோது அவர் சொன்னது போலவே
“கான்ஸ்டாநன்டிநோபிளாம்”என்று பதிலளித்த போது விட்ட அறை இன்னமும் ரொய்ங்க் என்று ஒலித்துக்கொண்டிருக்கிறது.அடுத்த நாளே அவருகிட்ட டியூசன் கிளாஸ் சேந்துட்டமில்ல.

பத்தாம் வகுப்பு : உதவித்தலைமை ஆசிரியர் இலட்சுமண வாத்தியார்.
இவர்கிட்டவும் டியூசன் படிச்சோமுல்ல.

மேலும் பல பாடங்கள் சொல்லிக்கொடுத்த தேவகி டீச்சர்,கிருஷ்னண் வாத்தியார், லாஜிக்கலி ராஜேந்திரன் வாத்தியார்,ஹிந்தி டீச்சர் குமாரி அம்முக்குட்டி,உடற்பயிற்சி ஆசிரியர் பொன்னுச்சாமி,என்.சி.சி பொறுப்பு ஆசிரியர் இராமசாமி, ஓய்வு பெறும் காலத்திலும் களைப்படையாது
பேட்மிண்ட்டன் விளையாடி தமிழாசிரியர் நடேச வாத்தியார்,தலைமை ஆசிரியர் நடராஜன் என்னும் கட்டையன் எல்லோர்ரையும் நினைவு கூர்கிறேன்.

உயர்கல்வி படிக்கும் போது (அதெல்லாம் படிச்சியா பெருசு)தலையில் இரண்டுகொம்பு முளைத்து விட்டதால் அந்த ஆசிரியர்கள் சொன்ன அறிவுரைகள் எதுவும் கேட்டவில்லை.ஆனால் அவர்கள் அனைவரும் ஞாபகத்தில் இருக்கிறார்கள்

ஆசிரியர்களை நினைவுபடுத்திய இந்தப்பதிவை அவர்களுக்கே சமர்ப்பித்து,
இப்பதிவை படிக்கும் நீங்கள் எல்லாரும் ஆசிரியர்களே, ஏனென்றால் தினமும்
உங்களிடமிருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொண்டுதானிருக்கிறேன்.

வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி.


அம்மா அப்பா விளையாட்டு

மார்ச் 25, 2007

சிறு வயதில் அக்கம்பக்கத்து சிறார்களுடன் ,சிற்சில சமயங்களில் பெரியவர்களின் துணையுடன் தத்தம் தாய்தந்தையரை நினைவில் கொண்டு அவர்களைப் போலவே கற்பனையாக பலப்பல செயல்களை
நினைவுபடுத்தி விளையாடியிருப்போம்.

ஆனால் ஒரு பருவத்தை கடந்த பின் அந்த விளையாட்டுகளை நினைவு கூர்ந்தால் சிறுபிள்ளைத்தனமாகத்தானே தோன்றுகிறது.யாராவது,
உங்கள் குழந்தைகள் இக்காலத்தில் இவ்விளையாட்டை ஆடுவதுண்டா,இல்லை சொல்லிக்கொடுக்கும் மனப்பான்மை நம்மில் எத்துணை பேருக்கு இருக்கிறது.

ஆனாலும் காலங்கள் மாறி விட்டது.எனவே குழந்தைகளுக்கு விளையாட்டைப்பற்றியும் அவற்றின் இன்றியமையைப்பற்றியும் பேசுவபர் எத்துணைபேர்.

விளையாட்டுக்கு முக்கியத்துவம் எந்த அளவுக்கு நமது கல்வியகங்களில் வழங்கப்படுகிறது. அப்படியே வழங்கப்பட்டாலும் அது எந்த அளவில் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறது.விளையாட்டுக்கல்விக்கு முக்கியத்துவம் நமது கல்வித்திட்டங்களில் வகுக்கப்படவே இல்லை.

வளரும் பிள்ளைகளுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தின் நன்மையை போதிப்பதில் முன்னோடியாய் இருப்பதில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பெற்றோர்கள் பின்னோடியாய் இருக்கிறோம்.

ஏனென்றால் நாம் கற்ற கல்வி அவ்வாறு, நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டது அவ்வாறு,படிக்கவில்லை என்றால் எதிர்காலம் கிடையாது. எட்டாம் வகுப்புக்கு பின் இந்தப்பிரச்சினை தலைதூக்க ஆரம்பிக்கும்.
படிப்பில் இவ்வளவு சதம் எடுக்கவில்லை என்றால் உனக்கு அந்தப்படிப்பு கிடையாது. பின் எதிர்காலம் இருண்டுவிடும். பின் கூலி வேலைக்குத்தான் செல்ல வேண்டும்,என்றெல்லாம் பயமுறுத்தி உண்மையாகவே அக்குழந்தைக்கு படிப்பு மட்டுமே முதல்,விளையாட்டு எல்லாம் தேவை இல்லாத ஒன்று என்ற மனப்பான்மை வந்து விடுகிறது.

ஆனால் அந்த ஆசைகளை எல்லாம் உள்மனத்தில் குழிதோண்டி புதைத்து விட்டு படிப்பு, படிப்பு பின் மேலும் படிப்பு,ஒன்றொன்றாக கடந்தபின் வேலை தேடும் படலம்.வேலை கிடைத்தபின் அதில் நிலைக்க வேண்டிய கட்டாயம், நிலைத்தபின் பதவி உயர்வு, வெளிநாட்டுப்பயணம், ஓரிரு ஆண்டுகளில்
தாய்தந்தையரை மேலும் மகிழ்வு செய்ய திருமணம், திருமணமாகி சில ஆண்டுகளில் பெற்றோராகி விட்டு தமது பெற்றோர் தொடர கொடுத்த அதே
அம்மா அப்பா விளையாட்டை விளையாட ஆயத்தம் ஆகி விடுகிறோம்.

இதில் நம் குழந்தை டேவிக் பெக்காம் அல்லது ரோனால்தின்யோ ஆக முடியாதா, ஒரு ரஃபேல் நாடால் அல்லது ரோஜர் பெடரர் ஆக முடியாதா, என்ற ஏக்கம் நம்மில் பல பேருக்கு இருந்தாலும் அம்மா அப்பா விளையாட்டில் அதன் தாக்கம் மறைந்து விடுகிறது.

நூறு கோடி மக்கள் கொண்ட நம் நாட்டில், உலகத்தரம் கொண்ட கால்பந்து அணியை உருவாக்க ஏன் முடியவில்லை. ஆசிய அளவிலே போட்டியிடும் கூடைப்பந்து அணி ஏன் உருவாக்க முடியவில்லை.

ஹாக்கி ஹாக்கி என்றொரு விளையாட்டு நம் நாட்டில் இருந்தது,செல்லுமிடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டி வந்த அந்த விளையாட்டின் சமாதியில் இன்று புல் முளைத்து விட்டது. எத்தனையோ தயான் சந்த்கள்(ஜெர்மனியில் இவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது) நாட்டில் மூலை முடுக்குகளில் இருப்பினும் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லையே.

அரசாங்கம் மட்டுமின்றி இந்தியாவில் இருக்கும் எத்தனையோ வெளிநாட்டுஉள்நாட்டு நிறுவனங்கள் ஏன் மற்றெந்த விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவமோ அல்லது ஆதரவோ அளிப்பதில்லை. விளையாட்டை விளையாட்டாய் மட்டும் கவனிக்காமல் ஏனிந்த பாரபட்ச
அரசியல் அணுகுமுறைகள்.ஒரே ஒரு விளையாட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஏன் மற்ற விளையாட்டுகளுக்கு கிடைப்பதில்லை.

காரணம் மக்கள்,ஆம் மக்களேதான், ஒரு உணவகத்தில் சாப்பாடோ அல்லது அணுகுமுறையோ அல்லது கவனிப்போ சரியில்லை என்றால் அடுத்தமுறை வேறோரு உணவகத்தை நாடிச் செல்கிறோம்.

அடித்து விரட்டினாலும், சுவையிலும் கவனிப்பிலும் உபசரிப்பிலும் அணுகுமுறையிலும் எத்தனைதான் காரமிருந்தாலும் கசப்பிருந்தாலும் மீண்டும் அதே உணவகத்துக்கு சென்றால், தான் என்ற இறுமாப்பு அவ்வுணவகத்துக்கு வந்து விடுகிறது. யாரும் போகவில்லை என்றால் ஒன்று இழுத்து மூட வேண்டியதுதான், இல்லையென்றால் வேறிடம் தேடியோட வேண்டியதுதான்.

இப்படித்தான் மக்களின் அணுகுமுறையும் ஒவ்வொரு விளையாட்டின் பாலிலும் மாறாத வரை அவ்விளையாட்டுகள் வளம் பெறப்போவதில்லை.
இந்தியாவும் உலக விளையாட்டரங்கில் விலை போகப்போவதில்லை.

அதுவரை அம்மா அப்பா விளையாட்டு விளையாடிக்கொண்டிருபோம், உண்மையாகவே.


வந்து கும்மு கும்முன்னு கும்முங்க

மார்ச் 24, 2007

தோத்தா அதுக்காக இப்ப என்ன முகாரி ராகமா பாட முடியும்.காலேஜுல படிக்கிற எலலாருமா அரியர்ஸ் இல்லாம பாஸ் செய்யுறாங்க.

தோல்வியே வெற்றிக்கு முதல்படி. கசப்பு என்று ஒரு சுவை இருப்பதால்தான் இனிப்பு என்ற சுவை மேலாதாக தோன்றுகிறது .

இப்படி எல்லாம் சொல்லி மனச தேத்திக்கலாமுன்னு பாத்தா முடியலியே மக்கா.

நேர்ல போய்தான் வெக்கணும்ன்னு நெனச்சேன்.ஆனா அந்த தகுதி கூட நம்ம இந்திய டீமுக்கு இல்லிங்க.

அவுங்க ஆதமா சாந்தியடைய பிரார்த்திக்கவும்.

ஏதோ என்னால முடிஞ்சது ,இந்த மலர் வளையம்தான்.

16ம் நாள் காரியங்கள் கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் நடைபெறும்.